2013.12.15 4:03pm
புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடை யாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில் புதிய தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு தடை இருக்குமானால் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொப்பியோ அல்லது பர்தாவோ முகத்தை மறைப்பது அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்னர் ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை எழுந்தபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேசி தீர்வு காணப்பட்டது போல் இதற்கும் தங்களால் தீர்வு காண முடியும் என பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய மதங்களுக்கும் உள்ளது. குறிப்பாக, கத்தோலிக்க அருட் சகோதரிகளுக்கு கூட ஏற்படலாம் என்பதால் இதற்கு சகல தரப்பினரும் இணைந்து தீர்வுகாண வேண்டியதன் அவசியம்' பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.




Time in Colombo
0 comments:
Post a Comment