வியாழக்கிழமை, 02 சனவரி 2014, 04:00pm s26
யாழ்.மாவட்டத்தில் சில பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் தரம் 6 வகுப்புக்களுக்கு மாணவர்களைச் சேர்க்கும் பொழுது சில பெற்றோர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ரூபா பணம் அறவிடப்படுவதாகவும் சில இடங்களைச் சேர்ந்த மாணவர்களை அத்தகைய பாடசாலைகள் சேர்த்துக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களைச் சேர்ப்பதற்கு எந்தப் பாடசாலையும் பணம் அறவிடக்கூடாது என்று முன்னரே அறிவித்துள்ளதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா தெரிவித்தார். இவ்வாறு பணம் அறவிடும் பாடசாலைகளில் ஒன்றாக சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி உள்ளதாகவும், பணம் செலுத்தினால்தான் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்று பாடசாலை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். தவிர கல்லூரியை அண்மித்துள்ள பெரிய புலோ, காட்டுப் புலம் மற்றும் கல்விளான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அந்தப் பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், தீவகத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் மருத்துவ கலாநிதி குமாரவேல் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பில் வட மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வ. ஸ்ரீகாந்தனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் தெரிவித்ததாவது: மாணவர்களைச் சேர்ப்பதற்கு தாம் பணம் எதுவும் அறவிட வில்லை. தாமாக விரும்பிக் கொடுப்பதையே நாம் ஏற்றுக் கொள்கிறோம். மாணவர் அனு மதிக்கு என்று எந்த ஒரு பெற்றோரிடமும் நாம் பணம் அறவிட வேண்டிய அவசியம் இல்லை. பாடசாலைக்கு மாதாந்த மின் கட்டணம் 10 ஆயிரம் ரூபா தொடக்கம் 12 ஆயிரம் ரூபா வரை வருகிறது. அரசு மாதாந்தம் ஆயிரம் ரூபா தொடக்கம் ஆயிரத்து 500 வரையே மின் கட்டணத்துக்குப் பணம் ஒதுக்குகிறது. எனவே அதற்காக பெற்றோர்களை சுய விருப்பத்தின் அடிப்படையில் பணம் கொடுங்கள் என்று கேட்டிருந்தோம். தவிர தற்போது 6 ஆம் தரத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 3 ஆம் தரத்தில் தமது பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் தான் எமது கல்லூரியில் அனுமதி வழங்குவோம் என்று நாம் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தோம். பாடசாலையின் கல்வித்தரத்தைப் பேணவும், வகுப்பறையில் மாணவர்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவுமே அவ்வாறு நாம் முடிவு எடுத்திருந்தோம். பாடசாலை கல்வித்தராத ரத்தை அடிப்படையாகக் கொண்டே அரசு எமக்கு நிதி உதவிகளை வழங்குகின்றது. நிதி வழங்கும் நிறுவனங்கள் கூட பரீட்சைச் சித்தி வீதம் தொடர்பில் எம்மிடம் கேட்பார்கள். குறித்த இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி வறுமையில் உள்ளனரே தவிர பொருளாதார ரீதியாக அவர்களுக்கு வறுமை இல்லை. சில பெற்றோரே தமது பிள்ளைகளைச் சேர்க்கவில்லை என்று குறை கூறுகிறார்கள் என்றார். இது தொடர்பில் வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். செல்வ ராஜாவிடம் கேட்டபோது, பெரிய புலோ, கல்விளான், காட்டுப் புலம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களது பெற்றோர்களை விரைவில் விக்ரோறியாக் கல்லூரியில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். அதன்போது பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும் என்றார்.





Time in Colombo
0 comments:
Post a Comment